தொடருவோர்

Sunday, May 22, 2011

சீனியர் சிடிசன்களின் சிந்தனைக்கு


தமிழில் ,ஆண்டுகள் 60 ,என்பது அனைவருக்கும் தெரியும் ..
நம்மை ,உலகில் வாழ்த்தி விட்டுச் சென்ற அதே ஆண்டு ,நம்மை மறுபடியும் வாழ்த்த வரும் பொன்னான ஆண்டு நமது சஷ்டியப்தபூர்த்தி.
கடந்து வந்த ,அந்த பொன்னான ஆண்டுகளில், நாம்
பெற்ற எத்தனையோ அனுபவங்கள்,அவைகள் மூலம் நாம் கற்ற பாடங்கள் என்று எத்தனையோ பெற்றிருப்போம்.அவைகள் நமக்கு இனி கைத்தடிகள்.
நடை பிரளாமல் வாழ்நாளைக் கடப்போம்.
த்டுக்கிவிழாமல் கவனமாக நடைபோடுவோம்
அத்தனை அனுபவங்களும் துணையாக வர, இனிவரும் நாட்களுக்கு அவை நமக்கு வழி காட்ட நடை போடுவோம்.
நாம் வாழ்ந்த அந்த 60ல் நாம் கற்றவை ,கற்க மறந்தவை ,ஏற்று மகிழ்ந்தவை,ஒதுக்கி மறந்தவை எல்லாமே முக்கியமானவைகள்தான்
   
   அறுபதுக்குப் பின்னும் நம்மை ஆரோக்கியம் குன்றாமல் வைத்து,நம்மை உலகில் இருத்தி வைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி,இனி வரும்
ஆண்டுகளை ஆர்ப்பரிக்காமல், அமைதியாக வாழ வழி காணுவோம்.

60க்குப் பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளும் போனஸ், 
65க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டுமே வெகுமதி என்றுணர்ந்து
அழகாக அமைதியாக ,சலனமில்லாமல் கொண்டு செல்ல முற்படுவோம்.

நட்பு விரோதம் உறவு பகை என்ற இரண்டு கோட்டுக்குள்ளும் சாயாமல் ,
நடு நிலைமைக்கு நம் மனதை, செலுத்தி நிறுத்துவோம்.

எதிர்பார்ப்புகள் நம் மன ஆரோக்கியத்துக்கு எதிரிகள்
புன்னகைக்குப் ,பதில் புன்னகையைக் கூட ,யாரிடமும் எதிர்பார்க்காமல் .புரிதலோடு வளைய வருவோம்

இறைவன் இயக்கியபடிதான் எல்லாமே நடக்கின்றன.
நம் இதழ்களில் ,புன்னகை கூட ,அவன் வரைந்திருந்தால்தான் பூக்கும்

அடுத்த வினாடியும் ,கடந்த வினாடியும் ,நம் வசம் இல்லை.கையில்
இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வினாடி கூட நமக்குச் சொந்தம்
இல்லை என்றாகும்.

நொடிப் பொழுதில் எதுவும் மாறும் எதுவும் நடக்கும்.
அந்த நொடிப்பொழுது கூட நம் வசம் இல்லையென்றால்,அதற்குள் நடக்கும் விஷயங்களை நடத்தி
வைப்பதும் ,மாற்றி அமைப்பதும் நாம்தான் ,என்ற எண்ணம் வரலாமா?அந்த எண்ணத்தைத்  தவிர்ப்போம்.

 நம் வாழ்வின் முதல் 3 ஆண்டுகள் ,இறைவன் மடி விட்டு இறங்காத ஸ்படிகம் போல் ,கழித்திருப்போம்.அதே நிலை அமைய
 இனிவரும் ஆண்டுகளில் நாமே நம்மை மானசீகமாய் இறைவனின் வசம்,அவன் பாதுகாப்பில்,
 அவன் அரவணைப்பில் அமர்த்திக் கொண்டு ,உலக நடப்பை கண்டு ரசிப்போம்.

யார் மீதும் அதிகப் படியான பாசமும் துவேஷமும் இல்லாத தெளிந்த ஓடையென உள்ளத்தைக் கசடற்றதாக்கிக் கொள்வோம்.

ஆரோக்கியத்துக்குச் சத்தான உணவு ,உற்சாகத்துக்கு சின்ன சின்ன கேளிக்கைகள்,என்றிருந்தால்
நமக்கும் ,உடன் இருப்பவர்களுக்கும் நல்லது என்பதைக் கருத்தில் கொள்வோம்.

தேவையற்ற ,அல்லது நம்மால் தீர்க்க இயலாத பிரச்சனைகள் எதையும் நம் ஆழ் மனதுக்குள்
நுழைந்து விடாமல்,கவனமாக இருப்போம்.

அடுத்தவருக்கு உதவும் வகையில் நாம் இல்லாது போகலாம்.ஆனால் அடுத்தவரை சிரமப்படுத்தாமல்
இருப்பது எந்த வயதிலும் இயலக் கூடிய காரியம்தான்.இது கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய கொள்கை.

நம் வாழ்க்கை அடுத்தவருக்கு நல்ல பாடங்களைக் கற்றுத்தராவிட்டாலும் பாதகமில்லை.நம் அனுபவங்கள் ,
நமக்கே பாடமாக அமையாமல் இனிமேலாவது வாழ்ந்து பார்ப்போம்.

உலகம் ஒரு நாடக மேடை,திரை அரங்கு என்பது போல் காட்சிகளைக் காணத்தயாராகுங்கள்

எழுதப்பட்ட வசனமோ,இயக்கப்பட்ட காட்சியோ நாம் மாற்ற இயலாது.முயற்சிக்கவும் வேண்டாம்

ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் ஒரு காயம் கூட நம்  மீது படாது.

எல்லோரையும் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக்குருவியாய் பார்த்து ரசிப்போம்.சிட்டுக்குருவி மேல் நமக்கு
இருந்த ரசனையை மனிதர்களிடம் மாற்றிப் பார்ப்போம்

’செய் செய்யாதே’ என்ற அறிவுரைகளை ,நம் வாய்மூலம் சொல்லாமல் ,வாழ்க்கை மூலம் சொல்லியிருந்தால்,
அதுவே நாம் பெற்ற வெற்றி

நம் மேனியின் சுருக்கங்கள் நாம் கற்ற அனுபவக் கல்வி தந்த பட்டங்களும் சான்றிதழ்களுமாகச் சேகரிப்போம்.புறம் சுருங்கினால்
பாதகமில்லை,அகம் சுருங்கக் கூடாது அது என்றுமே விசாலமாக வைத்துக் கொள்வோம்.

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....”.என்ற கீதையின் வரிகள் நமக்குத் துணை இருக்கட்டும்

”எதைக் கொண்டு வந்தோம் எதைக் கொண்டு போகப் போகிறோம்,” மனதுக்கு உரமேற்றும் நல்ல மருந்து,இந்த சிந்தனை.

நம் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு அடியின் எண்ணிக்கையும்,
இழுத்துவிடும் மூச்சின் கன அளவும் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டவை.
அவைகளைக் கூட்டவோ குறைப்பதோ நம் கையில் இல்லை.

தேவையற்ற அதிகப் படியான ஆசைகளைக் களைந்து கொண்டே வந்தால்,
ஓட்டுக்குள்ளிருந்தாலும் ஒட்டாது உருளும் விளாம்பழத்தின் பக்குவம் உணரலாம்.

எல்லோர் மத்தியில் இருந்தாலும் ,உறவென்றும் பகையென்றும் பாராது, இணைந்தும் ,
இணையாமலும் இருந்தால்,தாமரை இலைத் தண்ணீரின், சந்தோஷம் புரியும்.

எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நல்ல குறிக்கோள் கூட
சமயத்தில் பேராசைதான்.நடக்காத ஒரு விஷயம் என்றால் ,அது பேராசையில் சேரும்தானே?

ஆரோக்கியம் நமது சொத்து அதைக் காப்பதில் சுயநலம் இருந்தால் தவறில்லை.நம் அன்றாட வேலைக்கு
அடுத்தவரைச் சாராமல் இருப்பதற்கு நமது ஆரோக்கியத்தில் நாம் அதிகப் படியான அக்கறை எடுப்பது அவசியம்.
பணமும் பொருளும் இழந்தால் திரும்பப் பெற இயலும் ,ஆரோக்கியம் இழந்தால்?கவனம் வைப்போம்.

 தொடரும்

22 comments:

Ramani said...

நல்ல பதிவு நல்ல துவக்கம்
அதிக எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது
தொடர வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டுமில்லை, எல்லாருக்குமே பொருந்தும்.
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அழகாக அமைதியாக ,சலனமில்லாமல் கொண்டு செல்ல முற்படுவோம்.//
Nice..

குணசேகரன்... said...

ஆரோக்கியம் நமது சொத்து அதைக் காப்பதில் சுயநலம் இருந்தால் தவறில்லை//நல்ல பதிவு...

goma said...

ரமணி
நன்றி .இந்த பதிவு பல வருடங்கள் [நான் 60க்குள் நுழையும் முன்பே ]அமந்தில் சுழன்றடித்த சிந்தனைக் கொத்து.

இன்றுதான் பூங்கொத்தாக அளிக்கிறேன்

goma said...

மிடில்க்ளாஸ்மாதவி

எல்லோருக்கும் பொருந்தும் ஆனாலும் சீனியர்கள் கட்டாயம் மனதில் பதிந்து கொண்டால் நல்லது.
ஜூனியர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டாலும் அதனால் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தாங்கும் மன உறுதி கொண்டவர்களாக இருக்கலாம்

goma said...

குணசேகரன்
உண்மைதானே நமக்கு இறைவன் தந்த ஆரோக்கியத்தை நாம் பேணிக்காப்பாற்ற இயலாவிட்டால் நாம் வேறு என்ன சாதிக்க முடியும்.

goma said...

இராஜராஜேஸ்வரி

நன்றி.
சலனமில்லா வாழ்க்கையே சந்தோஷமான வாழ்க்கை

ராமலக்ஷ்மி said...

ஆம், அனைவருக்குமே பொருந்தக் கூடிய சிந்தனைகள். தொடருங்கள்.

goma said...

ஆம், அனைவருக்குமே பொருந்தக் கூடிய சிந்தனைகள். தொடருங்கள்.

ராமலஷ்மி

மிடில்க்ளாஸ்மாதவிக்கான பதிலே உங்களுக்கும்
எல்லோருக்கும் பொருந்தும் ஆனாலும் சீனியர்கள் கட்டாயம் மனதில் பதிந்து கொண்டால் நல்லது.
ஜூனியர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டாலும் அதனால் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தாங்கும் மன உறுதி உடல் உறுதி கொண்டவர்களாக இருக்கலாம்

ரியாஸ் அஹமது said...

எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நல்ல குறிக்கோள் கூட
சமயத்தில் பேராசைதான்.நடக்காத ஒரு விஷயம் என்றால் ,அது பேராசையில் சேரும்தானே?


ரொம்ப சிந்திக்கிய வைத்த வார்த்தைகள் நன்றி

goma said...

ரியாஸ் அஹமது

யோசித்துப்பார்த்தால் அடுத்தவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் ,அடுத்தவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அளவுக்கு அதிகமாகவே திண்டாடுவார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வணக்கம் மேடம், நானும் வந்துட்டேன் இருங்க படிச்சுட்டு வாரேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//ஓட்டுக்குள்ளிருந்தாலும் ஒட்டாது உருளும் விளாம்பழத்தின் பக்குவம் உணரலாம்.//

அடடடடடா தத்துவ மழை கொட்டுதே....

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நல்ல குறிக்கோள் கூட
சமயத்தில் பேராசைதான்.நடக்காத ஒரு விஷயம் என்றால் ,அது பேராசையில் சேரும்தானே?//

ம்ஹும் என்னை மாதிரின்னு சொல்லுங்க....

goma said...

நாஞ்சில் மனோ
எங்கே ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்.வந்ந்ந்துட்டீங்களா...

goma said...

நாஞ்சில் மனோ
தத்துவமழையில் நனைந்தால் நல்லது...ஆமாங்க இந்த மழை நல்லது.

அந்த மழையில் நனைந்தால் சளி பிடிக்கும்
இந்த மழையில் நனைந்தால் பிடிச்ச சனி விலகும்

goma said...

//எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நல்ல குறிக்கோள் கூட
சமயத்தில் பேராசைதான்.நடக்காத ஒரு விஷயம் என்றால் ,அது பேராசையில் சேரும்தானே?//

ம்ஹும் என்னை மாதிரின்னு சொல்லுங்க....

நாஞ்சிலாரே
உங்க பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறது எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கும் அழகு!!!!:-))))

நிலாமகள் said...

ச‌ஷ்டிய‌ப்த‌ பூர்த்தியில் பிர‌தியெடுத்து வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌த்தக்க‌ அருமையான‌ சிந்த‌னைக‌ள். தொகுப்புக்கு ந‌ன்றி. தின‌மொரு த‌ட‌வை ஜ‌பித்தால் ந‌ல‌மென‌ சொல்ல‌லாம்!

meenu-asha said...

இது எல்லோருக்கும் பொதுவானதே.எதிர்பார்ப்புகள் நல்லவையே,

goma said...

mmeenu asha
முதல் வருகை.கருத்துக்கு
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பழகிக் கொண்டால் ஒரு காயம் கூட நம் மீது படாது.
அருமையான கருத்து.

list